
சிவகங்கை மாவட்டம் தமராக்கி கிராமத்தைச் சேர்ந்த செல்லச்சாமியின் மகன் மனோஜ் பிரபு (29) வெளிநாட்டில் வேலை பார்த்துவிட்டு சமீபத்தில் சொந்த ஊருக்கு திரும்பியிருந்தார். இடையமேலூரில் நடைபெறும் கோயில் திருவிழாவுக்கு, நண்பர்கள் ஹரிஹரன் மற்றும் அஜித்குமாருடன் சென்ற மனோஜ், திருவிழா முடிந்து இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பி வந்துள்ளார்.
அப்போது புதுப்பட்டி அருகே வந்தபோது, காரில் வந்த மர்ம கும்பல், இருசக்கர வாகனத்தை மோதியதில் மனோ கீழே விழுந்துள்ளார். மேலும் அவர்களிடம் இருந்து தப்பிக்க முயன்ற மனோஜை விரட்டிச்சென்று ஓட ஓட கொடூரமாக வெட்டி கொலை செய்துள்ளனர். அவரை காப்பாற்ற முயன்ற நண்பர்களையும் கும்பல் தாக்கியதாக தெரிகிறது.
தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மனோஜின் உடல் பிரேத பரிசோதனைக்காக சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த கொலை சம்பவம் முன் விரோதமா? குடும்ப விவகாரமா? அல்லது வேறு காரணமா என்பதை தெரியப்படுத்த, போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி மர்ம கும்பலின் அடையாளம் கண்டறிந்து வருகிறார்கள்.