
ராமநாதபுரம் மாவட்டம் திருப்பாலைக்குடி கடலோர கிராமம் வழியாக தினமும் பல்வேறு ஆன்மீக மற்றும் சுற்றுலா வாகனங்கள் செல்வதும், பக்தர்கள் பாதயாத்திரையாக வருவதும் வழக்கம். அதேபோல் வல்மீக நாதர் சமேத பாகம்பிரியாள் அம்மன் கோவிலுக்கும் தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து பக்தர்கள் நடைபயணமாக வருகின்றனர்.
இந்த நிலையில் எம்.எஸ்.கே. நகர் பகுதியைச் சேர்ந்த 18 பெண்கள் குழுவாக பாதயாத்திரையில் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் திருப்பாலைக்குடி–உப்பூர் இடையிலான கிழக்கு கடற்கரை சாலையில் அதிகாலை 4.30 மணியளவில் சென்றபோது, அடையாளம் தெரியாத வாகனம் அவர்கள் கூட்டத்தில் மோதியது.
இதில் முனியசாமி மனைவி சாந்தி (50) மற்றும் பாலமுருகன் மனைவி புவனேஸ்வரி (40) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் நாகஜோதி உள்ளிட்ட சிலர் காயமடைந்து ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்தை ஏற்படுத்திய வாகனம் நிற்காமல் மின்னல் வேகத்தில் ஓடி மறைந்ததாக சக பக்தர்கள் கூறுகின்றனர். திருப்பாலைக்குடி இன்ஸ்பெக்டர் மணிகண்டன் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
ஆடி அமாவாசையை முன்னிட்டு பாதயாத்திரையாக சென்ற பெண் பக்தர்கள் விபத்தில் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.