
தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகிய பிறகு, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை தொடர்ந்து கடுமையாக விமர்சித்து வரும் டிடிவி தினகரனை, பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை சமீபத்தில் நேரில் சந்தித்து பேசியது அரசியல் வட்டாரங்களில் பெரும் கவனத்தை ஈர்த்தது. இதனால் தினகரன் மீண்டும் NDA கூட்டணியில் இணையக்கூடும் என்ற ஊகங்கள் எழுந்தன.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன், “எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சர் வேட்பாளராக ஒருபோதும் ஏற்க முடியாது. அவர் அந்த நிலைமையில் தொடரும் வரை, NDA கூட்டணியில் இணைய வாய்ப்பு இல்லை” எனத் தெளிவுபடுத்தினார்.
அவர் மேலும் கூறுகையில், “நான் கூட்டணியில் இருந்து விலகியபோது கூட, அவசரப்பட வேண்டாம் என்று அண்ணாமலை தொடர்ந்து தொலைபேசியில் வலியுறுத்தி வந்தார். அதையே கடந்த ஞாயிற்றுக்கிழமை நேரில் சந்தித்தபோதும் கூறினார். எனினும், என் முடிவில் மாற்றமில்லை” என்றார்.
இதன் மூலம், அண்ணாமலையின் நேரடி கோரிக்கையையும் டிடிவி தினகரன் முற்றாக நிராகரித்திருப்பது அரசியல் வட்டாரங்களில் புதிய விவாதங்களை கிளப்பியுள்ளது.