
வேதாரண்யம் தாலுகா தலைஞாயிறு ஒன்றியம் நீர்முளை அருகே நேற்று மாலை கோர விபத்தொன்று நடந்துள்ளது.
திருவாரூரை சேர்ந்த விவசாயி அருள்பிரகாஷ் (28) தனது மனைவி பெரியநாயகி (25) மற்றும் மகள் நிட்சயா (7) உடன் நாகை மாவட்டம் ஆய்முரில் உள்ள உறவினர் வீட்டிற்கு டூவீலரில் சென்றார்.
அப்போது மன்னார்குடியில் இருந்து நாகையை நோக்கிச் சென்ற கார், எதிர்பாராத விதத்தில் டூவீலரை மோதியது. அதன்பின் கார் சாலையோர மரத்தில் மோதி நின்றது. இவ்விபத்தில் தூக்கி வீசப்பட்ட மூவரும் படுகாயம் அடைந்தனர்.
உடனே பொதுமக்கள் மூவரையும் மீட்டு திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் பரிசோதித்த டாக்டர்கள், பெரியநாயகி மற்றும் நிட்சயா ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக தெரிவித்தனர். அருள்பிரகாஷை மேல்சிகிச்சைக்காக திருவாரூருக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.
சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து, தப்பியோடிய கார் டிரைவரை தேடி வருகின்றனர். ஒரே குடும்பத்தில் மூவரின் உயிரிழப்பு காரணமாக அந்த பகுதியில் ஆழ்ந்த சோகம் ஏற்பட்டு உள்ளது.