
சென்னையில் சமீபத்தில் நடைபெற்ற ‘தக் லைஃப்’ திரைப்படத்தின் ப்ரோமோஷன் விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய நடிகர் கமல்ஹாசன், “தமிழ் மொழியிலிருந்து பிறந்ததுதான் கன்னடம்” எனக் கூறியிருந்தார். இந்த கருத்து கர்நாடகாவில் கடுமையான எதிர்ப்பை உருவாக்கியது.
கர்நாடக முதல்வர் சித்தராமையா உள்ளிட்ட பலர் கமலின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்தனர். இதையடுத்து, கர்நாடக திரைப்பட வர்த்தக சபை, “தக் லைஃப்” படத்தை கர்நாடகாவில் வெளியிட அனுமதிக்கமாட்டோம் என அறிவித்துள்ளது.
இந்த நிலையில், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தபோது, “கமல் கூறிய கருத்தில் எந்த தவறும் இல்லை. தமிழில் இருந்து பிறந்ததுதான் சமஸ்கிருதம். அதை 24,000 பேர்தான் பேசுகின்றனர். கிரேக்கம், லத்தீன் போன்ற மொழிகளை விட தமிழ் மொழி தொன்மையானது என்பதை உலக ஆய்வாளர்களே தெரிவித்துள்ளனர். கர்நாடகாவில் நடைபெறும் போராட்டங்களை முடிவுக்கு கொண்டுவர வேண்டும்” எனக் கூறினார்.