
தமிழகத்தில் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவியருக்கு கல்வி விருதுகளை வழங்கும் விழா, தமிழக வெற்றிக்கழகத்தின் (த.வெ.க.) சார்பில் கடந்த சில ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது.
அந்த வரிசையில், இந்த ஆண்டுக்கான முதல் கட்ட விழா கடந்த மே 30-ஆம் தேதி நடைபெற்று முடிந்தது. இதில் 18 மாவட்டங்களைச் சேர்ந்த 88 தொகுதி மாணவர்கள் பங்கேற்று, த.வெ.க. தலைவர் விஜயின் கையால் பரிசுகளைப் பெற்றனர்.
இந்த விழாவின் இரண்டாம் கட்டம் நாளை (ஜூன் 4) நடைபெற உள்ளது. மாமல்லபுரத்தில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த விழாவில், 84 தொகுதிகளைச் சேர்ந்த தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியருக்கு சான்றிதழ்கள் மற்றும் ஊக்கத்தொகைகள் வழங்கப்பட உள்ளதுடன் மாணவர்கள் பெற்றோர்களுடன் வருவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
விழாவில் த.வெ.க. தலைவர் விஜய் நேரில் பங்கேற்று, மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி வாழ்த்து தெரிவிக்க உள்ளார்.
மேலும், மாணவர்களுடன் நேரடியாகக் கலந்துரையாடி, அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்வதற்கும் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. விழாவிற்கான ஏற்பாடுகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன