
திருப்பூர் மாநகர மாவட்ட அ.தி.மு.க. பேரவையின் சார்பில், தி.மு.க. அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளை கண்டித்து, வேலம்பாளையம், சிறுபூலுவபட்டி பகுதிகளில் திண்ணை பிரசாரம் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ., தமிழ்நாடு அரசின் செயல்பாடுகளை குறை கூறியதோடு, தற்போதைய ஆட்சி முறையை “நாடக அரசு” என விமர்சித்து்ளார்
மேலும் தி.மு.க. ஆட்சிக்கு வந்ததிலிருந்து திருப்பூரில் தொழில் வளர்ச்சி அடையவில்லை, மாறாக ஒடிசா, மத்தியப்பிரதேசம், பீகார் போன்ற மாநிலங்களின் தொழில்கள் அமோகமாக இடம்பெற்று வருகின்றது என அவர் தெரிவித்தார். அந்த மாநில அரசுகள் தொழிலதிபர்களுக்கு மின் கட்டண சலுகை, வட்டியில்லா கடன் உள்ளிட்ட பல ஆதரவுகளை வழங்கும் நிலையில், தமிழ்நாட்டில் எதுவும் இல்லை என்று அவர் குற்றம்சாட்டினார்.
“முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளிநாடுகளுக்கு சென்று தொழிலதிபர்களை அழைத்து வருவது கேலிக்கூத்தாக உள்ளது. இங்கே உள்ள தொழிலதிபர்கள் வேறு மாநிலங்களுக்கு சென்றுவிடுகிறார்கள். ஆனால் நமது முதல்வர் மட்டும் வெளிநாட்டு முதலீட்டை நாடும் நாடகத்தில் தான் மூழ்கியுள்ளார்,” என அவர் சாடினார்.
அத்துடன் இன்னும் 09 அமாவாசைகளில் இந்த நாடகம் முடிவுக்கு வரும் ஊழல் ஆட்சியை மக்கள் விரைவில் வீட்டிற்கு அனுப்புவார்கள்” எனக் கூறிய அவர், நல்லாட்சி நிலை பெற அனைவரும் ஒருங்கிணைந்து உழைக்க வேண்டும் என வலியுறுத்தினார்.