
சென்னை: மரக்கன்றுகள் நடுவதில் தி.மு.க அரசு தொடர்ந்து ஆர்வம் காட்டி வருகின்றது. அத்துடன் மரக்கன்றுகள் நட்டு பராமரிப்பதை ஊக்குவிக்கும் பொருட்டு பல்வேறு சிறப்பு பரிசுகளும் வழங்கப்பட்டு வருவது பொதுமக்களிடையே மகிழ்ச்சியை தந்துள்ளது.
முன்னாள் முதல்வரும் திமுக முன்னாள் தலைவருமான மறைந்த மு.கருணாநிதியின் பிறந்தநாளான ஜூன் 3ம் தேதியன்று அரசு விழாவாகக் கொண்டாடப்படும் என்று சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் 3 வருடங்களுக்கு முன்பு அறிவித்திருந்தார்.
இதையடுத்து, கடந்த 2022ல் கலைஞரின் பிறந்த நாளை முன்னிட்டு சென்னை அண்ணாநகரில் மாவட்ட கிழக்கு மாவட்ட சுற்றுச் சூழல் அணி சார்பில் 9999 மரக்கன்றுகள் நடும் நிகழ்வை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார்.
அதாவது, மரக்கன்றுகளை நட்டு முறையாக பராமரித்து வருபவர்களுக்கு, அடுத்த வருடம் கலைஞர் பிறந்த நாளில் தங்க நாணயம் வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார்.
அந்தவகையில், தமிழகம் முழுவதும் மரக்கன்றுகள் நடும் பணிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் முக்கியத்துவம் அளித்து வருகிறார். மரக்கன்றுகளை நட்டு பராமரிப்பதை ஊக்குவிக்கும் பொருட்டு இதுபோன்ற சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டு வருவது பொதுமக்களிடையே மகிழ்ச்சியை அளிக்கின்றது.
இப்படிப்பட்ட சூழலில், 3 ஆண்டுகளில் 10.86 கோடி மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன என்று சமீபத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவையில் அமைச்சர் பொன்முடி தெரிவித்திருந்தார். தமிழ்நாட்டின் பசுமை பரப்பை 33 சதவீதமாக உயர்த்த பசுமை தமிழ்நாடு இயக்கம் செயல்படுத்தப்பட்டு வருகிறது என்றும் அமைச்சர் பொன்முடி கூறியிருந்தார்.
அதேபோல, சில நாட்களுக்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசிய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, தமிழகத்தில் 2 லட்சம் ஏக்கர் கோயில் நிலங்கள் வரைபடமாக தயாரிக்கப்படும் என்று இந்து சமய அறநிலையத்துறை தெரிவித்துள்ளது.
ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து கோயில் நிலத்தை மீட்டு வருகின்றோம். பிறகு கோயில் நிலங்களை சுற்றி வேலி அமைத்து அதை வாடகைக்கு விடுவதன் மூலம் வருவாய் ஈட்டுவதாகவும். மேலும் பல சந்தர்ப்பங்களில், பசுமையை மேம்படுத்துவதற்காக பெருநிறுவன சமூக பொறுப்பு நிதியை பயன்படுத்தி காலியாக உள்ள நிலங்களில் மரங்களை நடுவதாகவும் கூறியுள்ளார்.
மேலும் இதுவும் “கோவில்களுக்கு நிலையான வருமானத்தை தருகின்றது” என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், கோவில்களுக்கு சொந்தமான, பயன்பாட்டில் இல்லாத நிலங்களில், பனை, இலுப்பை உள்ளிட்ட நாட்டு மரக்கன்றுகளை நட்டு பராமரிக்கும்படி, அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ஸ்ரீதர், அனைத்து இணை, துணை, உதவி கமிஷனர்களுக்கும் கடிதம் ஒன்றை அனுப்பியிருக்கிறார்..
அந்த கடிதத்தில் சட்டசபையில் அமைச்சர் சேகர்பாபு அறிவித்ததை நிறைவேற்ற, ஒவ்வொரு இணை கமிஷனரும், தங்கள் மண்டலத்தில், தலா ஒரு லட்சம் நாட்டு வகை மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முதற்கட்டமாக மரக்கன்றுகள் நடுவதற்கான நிலத்தை தேர்வு செய்ய வேண்டும். தேர்வு செய்யப்படும் இடம், மரங்கள் வளரக்கூடிய, நீர் வசதி உள்ள இடமாக இருக்க வேண்டும்.
தோட்டக்கலை அல்லது மரங்களை நடுவதில் நிபுணத்துவம் பெற்றவர்களை ஆலோசகராக நியமித்து, மரக்கன்று நடும் பணியை செய்யவேண்டும்.
சமூக ஆர்வலர்கள் மற்றும் பெரு நிறுவனங்கள் வழியே, அவற்றை மூன்று ஆண்டுகள் பராமரிக்க வேண்டும். பராமரிக்க எந்த நிறுவனமும் முன்வரவில்லை என்றால், மரக்கன்றுகளை நன்கொடையாளர்கள் வழியே பெற்று, கோவில் சார்பில் அவற்றை நட்டு பராமரிக்க வேண்டும்” என்றும் கூறியுள்ளார்.