
சேலம் மாவட்டம் சூரமலங்கலம் நெடுஞ்சாலை நகரைச் சேர்ந்த செல்வகுமார் (65) வனத்துறை ஊழியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். அவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்: மூத்த மகன் தமிழழகன் (23), மற்றும் இளைய மகன், பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு, செல்வகுமாரின் மனைவி சண்முகவள்ளி மனநலக்குறைவால் தற்கொலை செய்துகொண்டதையடுத்து, மூவரும் வீட்டில் தனியாக வசித்து வந்தனர்.
சமீபத்தில் மறுமணம் செய்ய விருப்பம் கொண்ட செல்வகுமார், இதற்காக நாளிதழில் விளம்பரம் வெளியிட்டுள்ளார். இந்த விவகாரம் அவரது மூத்த மகன் தமிழழகனுக்கு பிடிக்காமல், அவரிடம் வாக்குவாதம் ஏற்பட்டு தொடர்ந்து பலமுறை தகராறு நடந்ததாக கூறப்படுகிறது.
இதன் தொடர்ச்சியாக நேற்று காலை ஏற்பட்ட வாக்குவாதத்தில், கோபத்தில் இருந்த தமிழழகன் தந்தையை தாக்கியதோடு, வீட்டில் இருந்த கத்தியால் அவரை கழுத்தில் வெட்டியுள்ளான்.
ரத்த வெள்ளத்தில் கிடந்த செல்வகுமாரை அருகில் உள்ளவர்கள் மீட்டு உடனடியாக சேலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர்.
சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து தமிழழகனை கைது செய்து, அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
இந்த சம்பவம் சேலம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது