
படிக்கச் சொன்ன தந்தையின் தலையில் கல்லைப் போட்டு மகனே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் பகுதியைச் சேர்ந்த மாரியப்பன், தனது மகன் தங்கபாண்டியை படிப்பில் கவனம் செலுத்த வேண்டும் என தொடர்ந்து அறிவுறுத்தி வந்ததாக கூறப்படுகிறது.
தனியார் கல்லூரியில் படித்து வந்த தங்கபாண்டி, அடிக்கடி தந்தை படிக்கவில்லை என திட்டியதால் மனஅழுத்தத்திற்கு ஆளாகி, வீட்டில் பேசாமல் தனிமையாகவே இருந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று இரவு, வீட்டின் முன்பகுதியில் தூங்கி கொண்டிருந்த தந்தை மாரியப்பனின் தலையில், மகன் தங்கபாண்டி கல்லை பொட்டு கொலை செய்துள்ளார். சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தபோது, மாரியப்பன் உயிரிழந்திருந்தது தெரியவந்தது.
மேலப்பாளையம் போலீசார் விரைந்து வந்து சடலத்தை கைப்பற்றி நெல்லை அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பினர்.
கொலைக்குப் பிறகு தப்பிச் செல்ல முயன்ற தங்கபாண்டி, புதிய பேருந்து நிலையத்தில் பிடிபட்டார். போலீசார் விசாரணையில், “படிக்கவில்லை” என தந்தை அடிக்கடி எச்சரித்ததிலிருந்து மனஅழுத்தம் வந்ததால்தான் இக்கொடூர முடிவை எடுத்ததாக அவர் ஒப்புக் கொண்டதாக கூறப்படுகிறது.
சமீப காலங்களில் நெல்லை மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் மாணவர்கள் மற்றும் இளைஞர்களிடையே வன்முறை சம்பவங்கள் அதிகரித்துள்ள நிலையில், இந்த சம்பவம் மேலும் கவலையை அதிகரிக்கிறது.