
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே கடுவனூர் கிராமத்தைச் சேர்ந்த கேசரி வர்மன், கடந்த 20 ஆண்டுகளாக துபாயில் வேலை செய்து வருகிறார். தனது இரண்டாவது மகளுக்கு ஜூலை 7ஆம் தேதி மஞ்சள் நீராட்டு விழா நடத்துவதற்காக குடும்பத்துடன் சொந்த ஊருக்கு திரும்பிய அவர், வங்கி லாக்கரில் இருந்த 200 சவரன் தங்க நகைகளை வீட்டிற்கு கொண்டு வந்து வைத்திருந்தார்.
இந்த நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன் கேசரி வர்மன் தனது மனைவி மற்றும் மகள்களுடன் பாஸ்போர்ட் புதுப்பிக்க சென்னைக்கு சென்றிருந்த போது, வீட்டில் அவரது தந்தை முனியன் மற்றும் தாயார் மட்டும் இருந்தனர். அப்போது இரும்புக் கம்புகள் கொண்டு வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள் முதியவர்களை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்து பீரோவை உடைத்து நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
தகவல் அறிந்ததும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரஜத் சதுர்வேதி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தடயங்கள், கைரேகைகள் சேகரித்து, அருகிலுள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மகளின் விழா நடைபெற உள்ள நிலையில் குடும்பத்தினர் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர்.