
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியில் வனத்துறையினர் வழக்கம்போல் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அந்த வேளையில், இருசக்கர வாகனத்தில் வந்த முகமது இஸ்மாயில் என்பவரை நிறுத்தி சோதனை நடத்தினர்.
அதில், 22 பதப்படுத்தப்பட்ட கடல் குதிரைகளின் (Sea Horses) உடல்கள் இருப்பது தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து, முகமது இஸ்மாயிலிடம் விசாரணை நடத்திய வனத்துறையினர், அவர் வழங்கிய தகவலின் அடிப்படையில் முகமது உசேன் என்பவர் நடத்திவந்த கைவினை பொருட்கள் விற்பனை கடையை சோதனை செய்தனர். அங்கு மேலும் 34 சுறா துடுப்புகள் (Shark Fins) பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
விலங்குகள் பாதுகாப்பு சட்டத்திற்கும், கடல் வாழ்வினங்களைப் பாதுகாக்கும் சட்டங்களுக்கும் எதிராக இந்தப் பொருட்கள் சேகரிக்கப்பட்டதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். இதையடுத்து இருவரும் கைது செய்யப்பட்டு, வழக்குப்பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.