
சென்னை மாநகராட்சியின் 5 மற்றும் 6ஆம் மண்டல தூய்மை பணிகளை தனியார் நிறுவனங்களுக்கு ஒப்படைக்கும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, தூய்மை பணியாளர்கள் கடந்த 14 நாட்களாக ரிப்பன் மாளிகை முன்பு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், போராட்டக்காரர்களை அப்புறப்படுத்த வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, ரிப்பன் மாளிகை மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் போலீசார் அதிகப்படியான பாதுகாப்பில் குவிக்கப்பட்டனர். அமைச்சர் சேகர்பாபு, கே.என். நேரு, மேயர் பிரியா உள்ளிட்டோர் போராட்டக்குழுவினருடன் நடத்திய பேச்சுவார்த்தையிலும் உடன்பாடு எட்டப்படவில்லை.
இதனால் போராட்டத்தைத் தொடருவதாக போராட்டக்குழுவினர் அறிவித்தனர். இந்த சூழ்நிலையில், நீதிமன்ற உத்தரவை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறி, போலீசார் இரவோடு இரவாக தூய்மை பணியாளர்களை குண்டுக்கட்டாக கைது செய்தனர். கைது செய்யப்படும் போதும், தங்களது உரிமைகளை கோரி தொழிலாளர்கள் முழக்கங்களை எழுப்பியதால், அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.