
கோவை உக்கடம் பகுதியில் BMW காரில் வந்த இளைஞரை, கடந்த ஜூன் 24 அன்று உக்கடம் போலீசார் சோதனைக்காக நிறுத்தினர். அப்போது அந்த நபரை சுமார் ஐந்து காவலர்கள் லத்தியால் தாக்கிய காட்சி சமூக வலைதளத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் போலீஸ் அதிகாரிகள் மற்றும் அந்த இளைஞர் இருவர் சார்பிலும் இரண்டு விளக்க வீடியோக்களை வெளியிட்டனர்.
முதலில், அந்த இளைஞர் தன் பெயர் அபுதாகிர் என்று அறிமுகப்படுத்திவிட்டு, “அன்று காவலர்கள் என்னை சோதனை செய்ததில் நான் பதட்டத்தில் காரை எடுக்க முயற்சித்த போது காவலர் ஒருவரின் பெல்ட் காரில் சிக்கியது; அப்போது மாடியில் இருந்து யாரோ வீடியோ எடுத்துள்ளனர். எனக்கும் காவலர்களுக்கும் எந்தப் பிரச்சினையும் இல்லை; நாங்கள் சமரசம் செய்துவிட்டோம்” என்று கூறியுள்ளார்.
இரண்டாவது உக்கடம் காவல் நிலைய தலைமைக் காவலர் ஆனந்தகிருஷ்ணன் வெளியிட்டுள்ள வீடியோவில், “அன்று வாகனச் சோதனை செய்த போது அந்த இளைஞர் என்னை இழுத்து வாகனத்தில் ஏற்ற முயன்றதால் நான் கத்தினேன்; பிற காவலர்கள் காரை நிறுத்தி என்னை காப்பாற்றினர். பின்னர் அபுதாகிரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று பரிசோதனை செய்தபோது போதையில் இருப்பது உறுதி செய்யப்பட்டது; பின்னர் வழக்கு பதிவு செய்து அபராதம் விதிக்கப்பட்டது; அடுத்த நாள் அவரது வாகனம் அவருக்கு ஒப்படைக்கப்பட்டது” என்று குறிப்பிட்டார்.
இவ்விரு விளக்கக் காணொளிகளிலும், இளைஞர் மீது கடுமையாக தாக்கியதுபற்றி எந்தவித தகவலும் வழங்கப்படவில்லை. இது சமூக ஆர்வலர்களுக்கு ஏராளமான சந்தேகங்களை எழுப்பியுள்ளது.
மேலும் அபுதாகிர் காவலரை காரில் கடத்த முயற்சி செய்தது உண்மையானால், ஏன் அவர் மீது கடத்தல் வழக்கு அல்லது அரசு ஊழியரைப் பணி செய்ய விடாமல் தடுத்ததற்காக வழக்கு பதிவு செய்யப்படவில்லை என்று பல்வேறு கேள்விகளை சமூக ஆர்வலர்கள் எழுப்புகின்றனர்.