
தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே வெள்ளாளங்குளம் பகுதியில் அரசு மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இதில் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த பலர் கல்வி பயின்று வருகின்றனர்.
அந்த பள்ளியில் பிளஸ்-2 படிக்கும் மாணவன் ஒருவன், கடந்த சில தினங்களுக்கு முன்பு சக மாணவனை விளையாட்டாக தலையில் தட்டியதாக கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த மற்றொரு மாணவன், திட்டி விட்டு ஆத்திரமாக இருந்துள்ளார்.
இதனை தொடர்ந்து, தலையில் தட்டிய மாணவனை பயமுறுத்த புத்தகப்பைக்குள் வீட்டில் இருந்து அரிவாளை வைத்துக் கொண்டு மறுநாள் பள்ளிக்கு வந்துள்ளார். பள்ளிக்கு வந்த அந்த மாணவன், அரிவாளை காட்டி சக மாணவனை மிரட்டியதாக தெரிகிறது.
இதையறிந்த அதிர்ச்சியில் மாணவன் ஆசிரியரிடம் தகவல் தெரிவித்தார். உடனடியாக பள்ளி நிர்வாகம் சேர்ந்தமரம் போலீசாருக்கு தகவலளித்தது.
தகவல் கிடைத்த போலீசார் பள்ளிக்கு விரைந்து வந்து சம்பந்தப்பட்ட மாணவனை அழைத்து விசாரணை நடத்தினர். மேலும் அரிவாளுடன் பள்ளிக்கு வந்த மாணவனைப் பற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை தீவிரப்படுத்தியுள்ளனர்.