
தூத்துக்குடி மாவட்டம் பிரையண்ட் நகரைச் சேர்ந்த சந்திரசேகர்–தமிழ்செல்வி தம்பதியரின் மகனான கவின் செல்வகணேஷ் (27), சென்னையில் ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். கடந்த ஜூன் 27ம் தேதி நெல்லை கேடிசி நகரில், காதல் தகராறைத் தொடர்ந்து கொலை செய்யப்பட்டிருந்தார்.
இந்த கொலை தொடர்பாக, அவரது காதலியின் தம்பி சுர்ஜித் கைது செய்யப்பட்டார். மேலும், கொலைக்கு தூண்டியதாகக் கூறப்படும் சுர்ஜித்தின் பெற்றோர் – ஆயுதப்படை எஸ்ஐக்களான சரவணன் மற்றும் கிருஷ்ணகுமாரி ஆகியோர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதையடுத்து இருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
இந்தநிலையில், சுர்ஜித்தின் தந்தை சரவணன் நேற்று இரவு கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கவின் குடும்பத்தினர், சுர்ஜித்தின் பெற்றோரும் கைது செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தி, அவரது உடலை பெற்று கொள்வதை மறுத்து சொந்த ஊரான ஆறுமுகமங்கலத்தில் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த வழக்கில் முக்கியமான திருப்பமாக, சுர்ஜித்தின் சகோதரி சுபாஷினி, “கவினும் நானும் உண்மையாகவே காதலித்தோம்” என கூறும் வீடியோவொன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில்,
“கவின் எனக்கு நேரம் கேட்டிருந்தான். நாங்கள் செட்டில் ஆக 6 மாதங்கள் வேண்டுமென்று சொல்லியிருந்தான். ஆனா சுர்ஜித் அந்த விஷயத்தை அப்பாவிடம் சொல்லிவிட்டான். அப்பா என்னிடம் கேட்டபோது, ‘காதலிக்கவில்லை’ என நான் மறுத்துவிட்டேன். என் அம்மா, அப்பாவுக்கு இதில் எந்த தொடர்பும் இல்லை. தயவுசெய்து தவறான தகவல்களை பரப்ப வேண்டாம்” எனவும் சுபாஷினி தெரிவித்துள்ளார்.
அதேபோல, கவின் கொலை அன்று நடந்த நிகழ்வுகளை விளக்கமாக கூறியுள்ள சுபாஷினி,
“அன்று கவின் தாத்தாவுக்கு சிகிச்சை அளிக்க வந்திருந்தார். சிகிச்சை விவரங்கள் குறித்து பேசிக்கொண்டிருந்தபோது, அவர் வெளியே சென்று விட்டார். அதன்பிறகு அவர் எங்கு சென்றார், என்ன நடந்தது என்பது எங்களுக்குத் தெரியவில்லை” என கூறியுள்ளார்.
சுபாஷினியின் இந்த வீடியோ வெளியானதும், சமூக வலைதளங்களில் இது புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது. மேலும் விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது.