
தடை செய்யப்பட்ட ஐஎஸ்ஐஎஸ் (ISIS) அமைப்புக்கு சமூக வலைதளங்களில் ஆதரவாக செயல்பட்டதாகக் கூறப்படும் இளைஞர் ஒருவரை, தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் பழனியில் கைது செய்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் பழனி நகரை சேர்ந்த ராஜா முகமது என்பவர், 2022ஆம் ஆண்டு, சமூக வலைதளங்களில் தீவிரவாத சிந்தனைகளை பரப்பும் வகையில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்காக வேலை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. அதனை அடுத்து தேசிய புலனாய்வு முகமை (NIA) போலீசார் அவரிடம் அந்த நேரத்தில் விசாரணை மேற்கொண்டிருந்தனர்.
அதன்பின் மூன்று ஆண்டுகளாக ராஜா முகமது குறித்து கண்காணிப்பு மற்றும் ஆவணங்கள் சேகரிப்பு வேலைகளை முன்னெடுத்திருந்த என்.ஐ.ஏ., தற்போது பழனிக்கு வந்து மீண்டும் அவரை விசாரணைக்காக அழைத்து, அவரை காவலில் எடுத்துள்ளது.
பின்னர், அவரை கோவைக்கு அழைத்துச் சென்றதும் அதிகாரபூர்வ தகவலாக வெளியாகியுள்ளது. ராஜா முகமதுவுக்கு தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு இருப்பதாக NIA ஆதாரங்களைச் சமர்ப்பிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.