
தமிழ்நாட்டில் தனியார் பேருந்து கட்டணங்களை உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ள பேருந்து உரிமையாளர்கள் நீதிமன்றத்தை நாடியுள்ளனர்.
இதன் தொடர்ச்சியாக, நீதிமன்றம் மக்கள் கருத்துக்களை பெறுமாறு அறிவுறுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து, தற்போது மாநிலம் முழுவதும் பொதுமக்களிடமிருந்து கருத்துக் கேட்பு நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் அரியலூரில் செய்தியாளர்களை சந்தித்த போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், தனியார் பேருந்து கட்டணத்தை உயர்த்த வேண்டுமென்ற பேருந்து உரிமையாளர்களின் கோரிக்கையை கருத்தில் கொண்டு நீதிமன்றத்தில் அதற்கு தேவையான தகவல்கள் சமர்ப்பிக்கப்பட இருப்பதாக தெரிவித்தார்.
ஆனால் இந்த நடவடிக்கையால் , அரசு பேருந்து கட்டணங்களை உயர்த்த மாநில அரசுக்கு எவ்வித எண்ணமும் இல்லையென்றும் அவர் உறுதியளித்தார்.
ஏற்கனவே அரசு தனது நிலைப்பாட்டை தெளிவாக அறிவித்துவிட்டதாகவும், பொதுமக்களுக்கு அசௌகரியங்களை ஏற்படுத்த கூடிய எந்த நடவடிக்கைகளையும் அரசு எடுக்காது என்றும் அவர் கூறினார்.
தனியார் பேருந்துகள் கட்டணத்தை உயர்த்த வேண்டுமென்று கோரிக்கைகளை முன் வைத்திருந்தாலும் , இறுதி முடிவு நீதிமன்றத்தின் அறிவுறுத்தல்களின் அடிப்படையிலும் மக்களது கருத்துகளுடன் இணைந்துமே எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.