இன்ஸ்பெக்டர் கொலைவெறி தாக்குதல்.. தாயொருவர் பரபரப்பு புகார்!

Mother files shocking complaint against inspector’s violent assault incident


ஒரகடம் அருகே குற்றவாளியின் தாய் மீது காவல் ஆய்வாளர் கொலைவெறி தாக்குதல் நடத்தியதாக, பாதிக்கப்பட்ட பெண் கண்ணீர் மல்க வீடியோ வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வல்லம் பகுதியைச் சேர்ந்தவர் வாஞ்சிநாதன். இவர் மீது ஒரகடம் காவல் நிலையத்தில் அடிதடி, கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகள் உள்ளன. அண்மையில், அதே பகுதியை சேர்ந்த ராஜேஷ் என்பவரை காரில் கடத்திச் சென்று கொலை செய்ய முயற்சித்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த வாஞ்சிநாதன் நீண்ட நாட்களாக தலைமறைவாக இருந்து வந்துள்ளார்.

இந்த நிலையில் வல்லத்தில் உள்ள வாஞ்சிநாதனின் வீட்டிற்கு நள்ளிரவில் சென்ற காவல் ஆய்வாளர் வெங்கடேசன் மற்றும் காவலர்கள் 5 பேர் வாஞ்சிநாதன் குறித்து அவரது தாய் சல்சாவிடம் விசாரித்துள்ளனர். வாஞ்சிநாதன் குறித்து தனக்கு எதுவும் தெரியாது என சல்சா தெரிவித்துள்ளார்.

இதனால் கோபமடைந்த காவல் ஆய்வாளர் வெங்கடேசன் சல்சா மீது கண்மூடித்தனமாக கொலை வெறி தாக்குதல் நடத்தியுள்ளார். தன்னை லட்டியால் தாக்கியதாகவும், கழுத்தைப் பிடித்து தூக்கி கொல்ல முயற்சித்ததாகவும் சல்சா தற்போது வீடியோ வெளியிட்டுள்ளார். இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

இது குறித்து விளக்கம் அளித்த ஒரகடம் காவல் ஆய்வாளர் வெங்கடேசன், வாஞ்சிநாதன் குறித்து விசாரணை மட்டுமே நடத்தியதாகவும், அவர் மீது தாக்குதல் நடத்தவில்லை எனவும், கொலை முயற்சி வழக்கை திசை திருப்புவதற்காக இது போன்று வீடியோவை வெளியிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.