
சென்னை ரிச்சிதெருவில் செல்ஃபோன் கடையை நடத்தி வருபவர் சுமித் சிங். இவருக்கு பழக்கமான தனியார் வங்கி மேலாளர் நவீன் குமார், அவருடன் இணைந்த ஜி.எஸ்.டி அலுவலக ஊழியர் சுரேந்தர் மற்றும் சரத் ஆகியோர் மூவரும் ஹவாலா பண மோசடியில் ஈடுபட்டதாக தெரியவந்துள்ளது.
சுமித் சிங் கூறிய வங்கி கணக்கில் 50 லட்சம் ரூபாயை செலுத்தினால், அதே நேரத்தில் 52 லட்சம் ரூபாய் கையில் கிடைக்கும் என நம்ப வைத்து நவீன் குமார் தனது நண்பர்களுடன் பணம் செலுத்தினார். ஆனால், பணம் வங்கி கணக்கில் வராமல் தன்னை ஏமாற்ற முயன்றதாக நவீன் குமாரும், மற்ற இருவரும் சுமித் சிங்கை கடத்திச் சென்று 50 லட்சம் ரூபாய் கோரி மிரட்டினர்.
சுமித் சிங் தான் இருந்த இடத்தின் லொகேஷனை தந்தைக்கு அனுப்பியதால் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சுமித் சிங்கை மீட்டு, நவீன் குமார், ஜி.எஸ்.டி அலுவலக ஊழியர் சுரேந்தர், சரத் ஆகிய மூவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.