
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே ஹோப் பார்க் பகுதியில் வசித்து வந்த செந்தில்குமார் (50) ஊட்டி அருகே உள்ள அரசு பள்ளியில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் அறிவியல் ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். அவர் 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு அறிவியல் வகுப்பு எடுத்து வந்தார்.
சமீபத்தில் பள்ளியில் பாலியல் கல்வி குறித்து போலீசார் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர். இதில் நல்ல தொடுதல், கெட்ட தொடுதல் குறித்து மாணவிகளுக்கு விளக்கமளிக்கப்பட்டது. இந்நிலையில், 6ம் வகுப்பு படிக்கும் 12 வயது மாணவி ஒருவர், அறிவியல் ஆசிரியர் செந்தில்குமார் தன்னை மற்றும் பிற மாணவிகளை உடலில் தொடக்கூடாத இடங்களில் தொட்டு பாலியல் தொல்லை கொடுத்ததாக போலீசாரிடம் தெரிவித்தார். மேலும், சில மாணவிகளுக்கு முத்தமும் கொடுத்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
இதையடுத்து, அந்த பள்ளியில் படிக்கும் 21 மாணவிகள் செந்தில்குமார் பாலியல் தொந்தரவு அளித்ததாக போலீசாருக்கு புகார் அளித்தனர். அதிர்ச்சியடைந்த போலீசார் உடனே மேலதிக அதிகாரிகளுக்கும், குழந்தைகள் நலப்பிரிவு அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்தனர்.
ஊட்டி ஊரக போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயா தலைமையில் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில் ஆசிரியர் மீது குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டதால், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து செந்தில்குமாரை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஊட்டி கிளை சிறையில் அடைத்தனர்.
தொடர்ந்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில் செந்தில்குமார் கடந்த 23 ஆண்டுகளாக தமிழகத்தின் பல்வேறு இடங்களில் அறிவியல் ஆசிரியராக பணிபுரிந்திருந்தது தெரியவந்தது. மேலும், முன்பு பணியாற்றிய பள்ளிகளிலும் இவ்வாறான சம்பவங்கள் நடந்துள்ளதா என்பதையும் விசாரிக்க போலீசார் மற்றும் குழந்தைகள் நலப்பிரிவு அதிகாரிகள் இணைந்து விசாரணை நடத்த உள்ளனர்.
21 பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக அரசு பள்ளி ஆசிரியர் கைது செய்யப்பட்ட சம்பவம் நீலகிரி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.