
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள கொல்லம்பரம்பு கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துபாலகிருஷ்ணன்.
இவர், அந்த பகுதியில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவராக பணியாற்றியவர். நேற்று இரு சக்கர வாகனத்தில் சென்ற இவர், சந்திரகிரி பகுதியில் செல்லும்போது எதிரே வந்த லாரி ஒன்று நேருக்கு நேர் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இறந்தவரின் உறவினர்கள், இது சாதாரண விபத்து அல்ல என்றும், முத்துபாலகிருஷ்ணனுடன் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக திமுகவின் பிரமுகரான கருணாகரன் திட்டமிட்டு லாரியை அனுப்பி கொலை செய்துள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ளனர்.
இதையடுத்து, சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த ஓட்டப்பிடாரம் போலீசார், லாரி டிரைவரை கைது செய்து, சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இது ஒரு விபத்தா, அல்லது திட்டமிட்டு மேற்கொண்ட கொலையா என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது.