
திருவல்லிக்கேணி காவல் நிலையத்துக்குக் கிடைத்த ரகசிய தகவலை தொடர்ந்து, தாயார் சாகிப் தெருவில் உள்ள ஒரு மேன்சன் அருகே கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அந்த இடத்தில் சந்தேகத்திற்கு இடமான முறையில் சிலர் செயல்படுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அப்போது ராமநாதபுரத்தைச் சேர்ந்த அப்துல் ரவாப் (வயது 35), மற்றும் முகம்மது அஸ்வர் (வயது 44) ஆகிய இருவர் வெளிநாட்டு சிகரெட் பாக்கெட்டுகள் மற்றும் இ-சிகரெட்டுகளை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தது போலீசாரால் கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து இருவரும் உடனடியாக கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் வசமிருந்து மொத்தம் 14,900 வெளிநாட்டு சிகரெட் பாக்கெட்டுகள் மற்றும் 37 இ-சிகரெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் சட்ட விரோதமாக நாட்டுக்குள் கொண்டு வரப்பட்டவை எனக் கூறப்படுகிறது.
காவல்துறையினர் இந்த கடத்தல் மற்றும் விற்பனை வழக்கை தீவிரமாக விசாரித்து வருகின்றனர். மேலும் இதற்குப் பின்னால் உள்ள பெரிய வலையமைப்பை கண்டறியும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்தச் சம்பவம் திருவல்லிக்கேணி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.