
சென்னை குடிநீர் வாரியம் சார்பில் ரூ.6078.40 கோடி மதிப்பீட்டில், நாளொன்றுக்கு 400 மில்லியன் லிட்டர் உற்பத்தி திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் மூன்றாவது ஆலையின் கட்டுமானப் பணிகள், மாமல்லபுரம் அருகே நெம்மேலியில் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இந்த திட்டத்தால் கடலோர பகுதிகளில் கடல் அரிப்பு அதிகரித்து, கடல்நீர் ஊர் புகுந்து மீனவர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இதனைத் தொடர்ந்து, அரசு 2023-ல் ரூ.25 கோடி நிதியுடன் கடலில் தூண்டில் வளைவு அமைக்க ஒப்புதல் வழங்கியது. ஆனால் இன்று வரை எந்தவொரு பணியும் தொடங்கப்படவில்லை.
இந்த நிலைமையில், நெம்மேலி மற்றும் சுற்றுவட்டாரத்தில் வாழும் 150 மீனவர் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள், இன்று மீன்பிடிப்பை தவிர்த்து, தங்களின் பாதுகாப்பிற்காக தூண்டில் வளைவு அவசியம் என்ற கோரிக்கையை முன்வைத்து, ஊருக்குள் நுழையும் முக்கிய சாலையில் அமர்ந்து ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்தில் நெம்மேலி மீனவர் பஞ்சாயத்து சார்பாக 300-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். அவர்களுடன் திருப்போரூர் தாசில்தார் சரவணன், நெம்மேலி ஊராட்சி தலைவர் ரமணி சீமான் மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் நேரில் வந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.