
சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே சுவேத நதியிலிருந்து நடுவலூர் ஏரிக்குச் செல்லும் முக்கிய வாய்க்காலை ஆக்கிரமிப்புகள் முற்றிலும் தடுத்துவிட்டதாகக் கூறி, அப்பகுதி விவசாயிகள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.
நீரோட்டம் தடைபட்டதால் விவசாய நிலங்களுக்கு நீர் செல்வது பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறது என்று அவர்கள் வேதனை தெரிவித்தனர்.
மேலும், கால்வாயின் இருபுறமும் காங்கிரீட் அமைக்கும் பணிகள் நடைமுறையில் இருந்த போதும், ஆக்கிரமிப்புகள் காரணமாக அந்த பணிகள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் விவசாயிகள் குற்றம்சாட்டினர்.
இதனால் வேளாண்மை பாதிக்கப்படுவதோடு மட்டுமின்றி, ஏரிக்குச் செல்ல வேண்டிய நீர் வீணாக சுவேத நதியில் கரைந்துபோகும் அபாயம் ஏற்பட்டுள்ளது என்று விவசாயிகள் கூறினர். இதனைக் கண்டித்து அவர்கள் ஆத்தூர்–பெரம்பலூர் சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு, ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றவேண்டும் என்றும் கால்வாய் புனரமைப்பு பணிகளை விரைவாக முடிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
போராட்டத்துக்குப் பிறகு நிர்வாக அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், விவசாயிகள் நிலையை ஆராய்ந்து நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்தனர்.