ஜம்மு காஷ்மீரில்  4 நாட்களில் 19 பேர் உயிரிழப்பு – பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிதியுதவி அறிவிப்பு

ஜம்மு காஷ்மீரில் 4 நாட்களில் 19 பேர் உயிரிழப்பு

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பஹல்காம் சுற்றுலா தலத்தில் பயங்கரவாதிகள் நடத்திய  தாக்குதலில் 26 பொதுமக்கள் உயிரிழந்தனர். 

இதற்கு பதிலடியாக  இந்திய ஆயுதப்படைகள் பாகிஸ்தானின்  பயங்கரவாத முகாம்கள் மீது துல்லியமான தாக்குதலை மேற்கொண்டு பல முகாம்களை அழித்தன. 

இதையடுத்து, பாகிஸ்தானின் இராணுவம் இந்தியாவில் பல்வேறு இடங்களில் தாக்குதல்களை தொடர்ந்து நடத்தி வருகின்றன.

இந்த நிலையில் காஷ்மீரில் மீண்டும் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில்  , ஒரு அரசு அதிகாரி உட்பட 5 பேர் உயிரிழந்தனர். கடந்த நான்கு நாட்களில் மட்டும் ஜம்மு காஷ்மீர் பகுதிகளில் நடைபெற்ற தாக்குதல்களில் 19 பேர் மரணமடைந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த  சூழ்நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு மாநில அரசு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கும் என ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா அறிவித்துள்ளார். 

மேலும், பாதுகாப்பு ஏற்பாடுகள் வலுப்படுத்தப்பட்டு, எவ்விதமான அச்சுறுத்தல்களையும் எதிர்கொள்ள அரசு தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்.