
ராமநாதபுரம் மாவட்டம் காமன்கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர்களுக்கான பொதுக்கலந்தாய்வு நடைபெற்று வந்தது. இதில் முதுகலை கணிதவியல் ஆசிரியர் ஒருவர் கலந்துகொண்டிருந்தார். அவர் தன்னுக்கு உரிய முன்னுரிமை வழங்கப்படவில்லை எனக் கூறி பள்ளி வளாகத்தின் நடுவே அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
திடீரென, தனது கைபையில் இருந்த பெட்ரோலை உடலில் ஊற்றி, ‘‘கல்வித்துறை அராஜகம் ஒழிக..! எனக்கு நீதி வேண்டும்..!’’ என கூச்சலிட்டு தீக்குளிக்க முயன்றார்.
இதனை பார்த்த பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசார் திடீரென அவரை தடுத்து நிறுத்தி, பெட்ரோல் பாட்டிலை பறித்து கொண்டு உடனடியாக தண்ணீர் ஊற்றி அவரை காப்பாற்றினர்.
இந்தச் சம்பவம் பள்ளி வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்த, ஆசிரியர் தரப்பிலும் கல்வித்துறையிலும் அதிர்ச்சி நிலை ஏற்பட்டுள்ளது.