
திருப்பூர் மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பக பகுதியில் 18 மலை கிராமங்கள் உள்ளன. இதில் 6,000-க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களில் ஈசல் திட்டு பகுதியைச் சேர்ந்த மணியன் சில நாட்களுக்கு முன்பு உடுமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில் உயிரிழந்தார்.
அவரது உடலை சொந்த கிராமத்திற்கு கொண்டு செல்ல சாலை வசதி இல்லாததால், வனவிலங்குகள் நடமாடும் அடர்ந்த காட்டுப்பாதையில், கிராம மக்கள் அவரது உடலை தொட்டிலில் கட்டி தூக்கிச் சென்றனர்.
மருத்துவம், கல்வி உள்ளிட்ட அடிப்படை வசதிக்காக சாலை அமைக்க மலைவாழ் மக்கள் பல ஆண்டுகளாக போராடி வந்தும் அதற்கான நடவடிக்கை நிறைவேறவில்லை. முன்னாள் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்தவராஜ் இதற்காக ரூ.59 லட்சம் நிதி ஒதுக்கியிருந்தாலும், இரண்டு ஆண்டுகளாக சாலை அமைப்பு தொடங்கப்படவில்லை.
இதனால் மலைவாழ் மக்கள் இன்று வரை இந்த அவலத்தை சந்தித்து வருவதாக வேதனை தெரிவித்துள்ளனர்.