நீட் தேர்வில் 502 மதிப்பெண் பெற்றும்… அரசு மருத்துவக் கல்லூரி ஆசையில் மாணவி தற்கொலை!

"Girl student dies by suicide after scoring 502 in NEET exam, raising concerns over academic pressure."


காஞ்சிபுரம் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட திருகாளிமேடு காமராஜர் தெருவைச் சேர்ந்தவர் சாதிக். ஆட்டோ ஓட்டுநரான இவர், தனது மகள் சமீமாவை (வயது 18) கல்வியில் சிறந்து விளங்கச் செய்துள்ளார். சமீமா, பிளஸ் டூ முடித்த பிறகு இரண்டாவது முறையாக நீட் தேர்வு எழுதி, அதில் 502 மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெற்றிருந்தார்.

இந்த நிலையில், எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். படிப்புகளுக்கான அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான தரவரிசைப் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதில் இடம் கிடைக்குமா என மிகுந்த பதட்டத்துடன் இருந்த சமீமா, “இடம் கிடைக்காவிட்டால் என்ன செய்வேன்?” என்ற பயத்தில் தற்கொலை செய்து கொண்டுள்ளார்

சமீமாவின் மரணத்தை உறவினர்கள் மறைக்க முயற்சி செய்தபோதும், தகவல் கிடைத்த காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்துக்கு சென்று உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் அனுப்பி வைத்தனர்.

தாலுகா காவல்துறையினர் இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், சமூகநிலை மற்றும் பொருளாதார பின்னணியால் மாணவிக்கு மருத்துவக் கல்வி கனவாகவே மாறியதை மையமாகக் கொண்டு, தற்கொலை செய்து கொண்டதாகத் தெரிகிறது.

அதிக மதிப்பெண்கள் பெற்றும் அரசு இடம் கிடைக்கும் என உறுதி இல்லாத நிலை, மாணவிகள் மற்றும் மாணவர்களை முடிவற்ற பதட்டத்தில் தள்ளுகிறது. சமீமாவின் மரணத்திற்கு காரணம் அரசு முறைமை தானா? எனக் கேள்வி எழுப்பும் வகையில், உள்ளூர் மக்கள் கடும் அதிருப்தியையும் கோபத்தையும் வெளிப்படுத்தி வருகின்றனர்