
சென்னை ஆவடி நாமராஜர் நகர் மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் மணி (47), கடந்த ஜூலை 27ஆம் தேதி தேனாம்பேட்டையில் உள்ள நட்சத்திர ஓட்டல் மதுபாரில் மது அருந்திக்கொண்டிருந்தார். அப்போது, ஏற்கனவே அவருடன் அறிமுகமாக இருந்த இளம்பெண் தீபிகா (22), குறித்த பாருக்கு வந்துள்ளார். இருவரும் ஒன்றாக மது அருந்தியதுடன், அதே ஓட்டலில் 104ஆம் எண்நிலைய அறையை எடுத்துப் தங்கியுள்ளனர்
அன்று இரவு முழுவதும் உல்லாசமாக இருந்த பின்னர், உடல் சோர்வால் தூங்கிய மணியின் கழுத்தில் அணிந்திருந்த 10 சவரன் செயினை தீபிகா பறித்து கொண்டு ஓட்டலில் இருந்து வெளியேறியுள்ளார். அடுத்த நாள் விழித்த மணிக்கு செயின் மாயமானது தெரிய வந்ததும், அவர் ஜூலை 29ஆம் தேதி தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
உதவி ஆய்வாளர் மேத்யூ ரோஸ் தலைமையில் நடந்த விசாரணையில், ஓட்டல் சிசிடிவி காட்சிகளை ஆதாரமாக கொண்டு குன்றத்தூர் சிவன்தாங்கல் பகுதியில் பதுங்கியிருந்த தீபிகா கைது செய்யப்பட்டார்.
விசாரணையில், தீபிகாவுக்கு திருமணம் நடந்து ஒரு குழந்தை இருப்பதும், தற்போது மேற்கு மாம்பலம் பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமாருடன் கள்ளக்காதல் உறவு வைத்திருந்ததும் தெரியவந்தது. தனது குழந்தையை சகோதரனிடம் விட்டுவிட்டு, வார இறுதி நாட்களில் நட்சத்திர ஓட்டல்களுக்கு சென்று, வயதான தொழிலதிபர்களை குறிவைத்து, மது போதையில் அவர்களுடன் உல்லாசமாக இருந்து நகை, பணத்தை பறித்து வந்துள்ளதாகவும் அவர் ஒப்புக் கொண்டார்.
தீபிகா, திருடிய 10 சவரன் செயினை “அம்மா ஆபரேஷனுக்காக பணம் தேவைப்படுகிறது” எனக் கூறி ஒரு அடகு கடையில் ரூ.6 லட்சத்திற்கு விற்றுள்ளார். அதிலிருந்து கள்ள காதலன் சதீஷ்குமாருக்கு ‘கேடிஎம் டியூக்’ பைக் வாங்கித் தந்துள்ளார். மீதமுள்ள தொகையை இருவரும் சொகுசாகச் செலவழித்து வந்துள்ளனர்
தொடர்ந்து சதீஷ்குமாரும் கைது செய்யப்பட்டார். இருவரிடமிருந்து ரூ.3,14,700 மற்றும் திருடப்பட்ட 10 சவரன் செயினும் போலீசாரால் மீட்கப்பட்டது. நகையை வாங்கிய அடகு கடை உரிமையாளரிடம் இருந்து செயினும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம், நட்சத்திர ஓட்டல் பார்களில் இளம்பெண்கள் மூலம் நடைபெறும் முந்தைய நகை-பணம் பறிக்கும் வழக்குகளையும் மீண்டும் நினைவுபடுத்தியுள்ளது. மேலும் இந்த வழக்கை தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.