
திண்டுக்கல்லில் உள்ள தனியார் கல்லூரி மைதானத்தில் பள்ளி மாணவர்களுக்கு இடையேயான ஹாக்கி போட்டி நேற்று நடைபெற்றது. இதில் மாவட்டத்திலுள்ள 12 பள்ளிகள் பங்கேற்றன. இறுதிப் போட்டி முத்தழகுபட்டி பிரான்சிஸ் சேவியர் பள்ளி மற்றும் தூய மரியன்னை மேல்நிலைப்பள்ளி இடையே நடைபெற்றது.
போட்டி நடந்து கொண்டிருந்த வேளையில், கோல் கீப்பர் மீது கோபமடைந்த ஒரு தனியார் கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள், திடீரென கல்லால் தாக்கியதாக புகார் எழுந்துள்ளது. இதைத் தொடர்ந்து, ஹாக்கி மைதானத்தில் பதற்றம் ஏற்பட்டு, கல்லூரி மாணவர்கள் சிலர், போட்டியில் பங்கேற்ற பள்ளி மாணவர்களை சரமாரியாக தாக்கிய சம்பவம் இடம்பெற்றது.
இந்த தாக்குதல் காட்சிகள் அருகிலிருந்தவர்கள் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டதையடுத்து, இந்த சம்பவம் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சி மற்றும் கண்டனத்தை ஏற்படுத்தியுள்ளது.
தாக்குதலில் மாணவி ஒருவர் மற்றும் இரு பள்ளி மாணவர்கள் காயமடைந்துள்ளனர். அவர்கள் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட தரப்பினரிடம் இருந்து புகார் பெறப்பட்ட நிலையில், தாடிக்கொம்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து, தாக்குதலுக்கு காரணமான கல்லூரி மாணவர்களை அடையாளம் காணும் பணியில் தீவிரமாக ஈடுப்பட்டுள்ளனர். மேலும், போட்டி ஏற்பாட்டாளர்கள் மற்றும் பாதுகாப்பு மீறல் குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.