
திருப்பூர், வேலம்பாளையம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட திருமுருகன்பூண்டி ரிங் ரோடு அருகே ஆகஸ்ட் 15 ஆம் தேதி இரவு போலீசார் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, நள்ளிரவு 12 மணியளவில் அந்த வழியாக வந்த ஆட்டோவில் ஒரு பெண் அலறித் துடித்ததை போலீசார் கவனித்தனர். உடனடியாக அந்த ஆட்டோவை நிறுத்திச் சென்று பார்த்தபோது, ஒடிசாவைச் சேர்ந்த பாரதி என்ற பெண் பிரசவத்திற்காக மருத்துவமனைக்குச் செல்லும் நிலையில், வலியால் துடித்துக் கொண்டிருந்தது தெரியவந்தது.
நிலைமை மோசமடைந்ததால் உடனடியாக பெண் காவலர் கோகிலா, ஆட்டோவில் ஏறி அந்தப் பெண்ணுக்கு உதவினார். மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே பிரசவம் தொடங்கியதால், தனது நர்சிங் படிப்பு அனுபவத்தை பயன்படுத்திய கோகிலா, பாரதிக்கு பிரசவம் பார்த்து, அழகிய பெண் குழந்தையை பெற்றெடுக்கச் செய்தார். பின்னர் தாயும் சேயும் அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, தொப்புள்கொடி அகற்றப்பட்டு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். இருவரும் தற்போது நலமாக உள்ளனர்.
இந்த மனிதாபிமான சேவை திருப்பூர் முழுவதும் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, பிரசவம் பார்த்த பெண் காவலர் கோகிலாவை திருப்பூர் மாநகர காவல் ஆணையர் ராஜேந்திரன் நேரில் சந்தித்து பாராட்டினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கோகிலா, “சுதந்திர தினம் என்பதால் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தோம். அப்போது ஆட்டோவில் அலறிய பெண்ணின் நிலைமையை உணர்ந்து உடனடியாக உதவி செய்தேன். நான் முன்பு நர்சிங் படித்திருந்த அனுபவம் காரணமாகவே பிரசவம் நடத்த முடிந்தது. தற்போது காவலராகப் பணியாற்றிக் கொண்டிருந்தாலும், அந்த படிப்பு இந்தத் தருணத்தில் ஒரு உயிரைக் காப்பாற்ற உதவியது எனக்கு பெருமையாக இருக்கிறது,” என்றார்.