
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி வட்டத்தில் உள்ள வடகரை கிராமத்தில் தனியாருக்குச் சொந்தமான பட்டாசு தொழிற்சாலையில் இன்று காலை சுமார் 9 மணி அளவில் ஏற்பட்ட வெடி விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த துயரமான சம்பவத்தில் கல்குறிச்சியைச் சேர்ந்த சவுண்டம்மாள் மற்றும் தண்டியளேந்தலைச் சேர்ந்த கருப்பையா ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இந்த செய்தியைக் கேட்டதும் ஆழ்ந்த வருத்தம் மற்றும் வேதனையுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது இரங்கலைத் தெரிவித்தார். மேலும் விபத்தில் காயமடைந்து விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நால்வருக்கு சிறப்பு மருத்துவசிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ளார். காயமடைந்தோர் காரியாபட்டியைச் சேர்ந்த கணேசன், திருமுருகன், மாரியம்மாள் மற்றும் பேச்சியம்மாள் என்பவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து முதல்வர், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.4 லட்சமும், பலத்த காயமடைந்த நால்வருக்கும் தலா ரூ.1 லட்சமும், சிறு காயங்களுக்கு சிகிச்சை பெறுபவர்களுக்கு ரூ.50,000 நிவாரணமாக முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கப்பட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.