
சென்னை பெருங்களத்தூரை சேர்ந்த குமார் (57), தனது மனைவி ஜெயா (55), மகள் மோனிஷா (30), உறவினர் ஸ்டாலின் (36), அவரது மனைவி துர்கா (32) மற்றும் 3 வயது குழந்தை நிலாவேணி சூர்யா ஆகியோருடன் தஞ்சாவூர் சுற்றுலா புறப்பட்டிருந்தார்.
அவர்கள் இன்று காலை கும்பகோணத்தில் சாமி தரிசனம் முடித்துவிட்டு அதே காரில் தஞ்சை பெரிய கோவில் நோக்கி புறப்பட்டனர். விக்கிரவாண்டி புறவழிச்சாலையில் நாற்று ஏற்றிக்கொண்டு வந்த மினி லாரி நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது
இதில் காரும், லாரியும் தூக்கி வீசப்பட்டு சிதறி சேதமடைந்தன. இதில் ஜெயா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். குமார், துர்கா, மோனிஷா, ஸ்டாலின், சிறுமி நிலாவேணி சூர்யா மற்றும் லாரி டிரைவர் விக்னேஷ் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.
விபத்து குறித்து தகவல் அறிந்த தஞ்சாவூர் தாலுகா போலீசார் விரைந்து வந்து காயம் அடைந்தவர்களை மீட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
செல்லும் வழியிலேயே குமார், துர்கா, சிறுமி நிலாவேணி சூர்யா ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர். மோனிஷா, ஸ்டாலின், விக்னேஷ் ஆகியோருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த கோர விபத்து காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. சேதமடைந்த வாகனங்களை போலீசார் அப்புறப்படுத்தி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தஞ்சைக்கு ஆன்மீக சுற்றுலா வந்த குடும்பத்தினர் இவ்வாறு விபத்தில் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.