
கடலூர் மாவட்டம் புவனகிரியைச் சேர்ந்த 12-ஆம் வகுப்பு மாணவி ஒருவர், அருகிலுள்ள பள்ளியில் கல்வி கற்கிறார். இவர் மீது, தந்தையின் சகோதரரின் மகன் அஜய் (25) பாலியல் ரீதியாக கடந்த சில ஆண்டுகளாகவே தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.
அஜய், மேல்வனகிரி கோட்டைமேட்டு தெருவைச் சேர்ந்தவர். ‘தங்கை’ எனப் பேசி மாணவியுடன் நெருக்கம் காட்டிய அவர், மாணவி 8-ஆம் வகுப்பு படித்து வந்தபோதே பாலியல் தொல்லை கொடுக்கத் தொடங்கியதாகவும், பின்னர் பூப்பெய்திய பின் வன்முறையான பாலியல் வன்கொடுமை செய்து வந்ததாகவும் தெரிய வந்துள்ளது.
அத்துடன், அஜய், மாணவியை மிரட்டி வீடியோக்களை எடுத்து தனது நண்பர்களான சூர்யபிரகாஷ் (21), அரவிந்தன் (22), சக்தி (21) ஆகியோரிடம் பகிர்ந்துள்ளார். இதையடுத்து, அந்த மூவரும் வீடியோவை இணையத்தில் வெளியிட்டுவிடுவோம் என மிரட்டி, “உன்னுடைய பெற்றோர் உயிரை மாய்த்துக் கொள்வார்கள்” என அச்சுறுத்தி, அவர்களுடனும் பாலியல் உறவில் இருக்குமாறு மாணவியை கட்டாயப்படுத்தியுள்ளனர்.
இந்த கொடூரங்கள் காரணமாக, மாணவி கடும் மன உளைச்சலுக்கு ஆளாகிய நிலையில், அவரது செயல்பாடுகளில் பெற்றோர் சந்தேகம் கொண்டு சென்னையில் உள்ள சித்தி வீட்டிற்கு அனுப்பியுள்ளனர். அங்கு சித்தியிடம் மனம்திறந்த மாணவி, தன்னைச் சுற்றி நடந்து வந்த கொடுமைகளை சொல்லியுள்ளார்.
இதையடுத்து அதிர்ச்சியடைந்த சித்தி, வடபழனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். சம்பவம் கடலூர் மாவட்டத்தில் நடந்ததால், புகார் சிதம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டது.
காவல் ஆய்வாளர் லட்சுமி தலைமையிலான விசாரணையில், மாணவியின் முறைப்பாடு உண்மையென உறுதி செய்யப்பட்டது. அதன் பேரில், பாபி எனும் அஜய், சூர்யபிரகாஷ், சக்தி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். அரவிந்தனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
கைதானவர்களில் சக்தி மட்டும் கோவையில் இரண்டாம் ஆண்டு படித்து வருவதாகவும், மற்றவர்கள் “நாங்கள் தான் கெத்து” எனச் சொல்லிக்கொண்டு ஊரைச் சுற்றி வந்த இளைஞர்கள் என போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
தொடர்ந்து, போக்ஸோ சட்டத்தின் கீழ் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், சிறுமியின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம், சமூக வலைதளங்களிலும் பொதுமக்களிடையிலும் பெரும் அதிர்ச்சியையும் கோபத்தையும் கிளப்பியுள்ளது.