
அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி பணம் பெற்றுக் கொண்டு மோசடி செய்ததற்காக அதிமுக தொழில்நுட்ப பிரிவு மாநில நிர்வாகி பிரசாத் மீது புகார் அளிக்கப்பட்டது.
மேலும் , நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு பாரில் தாறாரில் ஈடுபட்டதற்காகவும், அவர் கைது செய்யப்பட்டு தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
பிரசாத் மீது நுங்கம்பாக்கம் போலீசார் மூன்று தனித்தனியான வழக்குகள் பதிவு செய்துள்ளதன் தொடர்ச்சியாக, கட்சி ஒழுங்குக்கு மாறாக, அதிமுகவின் மரியாதைக்கும் புகழுக்கும் கலங்கம் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதாக கூறி, கட்சி தலைமை அவரை கட்சியில் இருந்து நீக்கியுள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், கழகத்தின் கொள்கை- குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு கழகத்தின் ஒழுங்குமுறை குலையும் வகையில் நடந்து கொண்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும் T. பிரசாத், (கழக தகவல் தொழில்நுட்பப் பிரிவு துணைச் செயலாளர், தென் சென்னை தெற்கு கிழக்கு மாவட்டம்) இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்.மேலும் கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்
இந்த முடிவு கட்சியின் ஒழுங்கையும் நம்பிக்கையையும் காப்பாற்றும் நோக்கில் எடுக்கப்பட்டது என கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.