டி.ஐ.ஜி. வருண்குமார் தாக்கல் செய்த அவதூறு வழக்கில் சீமான் நேரில் ஆஜராக நீதிமன்ற உத்தரவு!

Court directs Seeman to appear in person in the defamation case filed by DIG Varunkumar.

திருச்சி  டிஐஜியாக இருந்த வருண்குமார் மற்றும் அவரது குடும்பத்தினர் குறித்து, நாம் தமிழர் கட்சி சார்பில் சமூக வலைதளங்களில் அவதூறான கருத்துகள் வெளியிடப்பட்டதாக கடந்த காலத்தில் குற்றச்சாட்டு எழுந்தது.

இதனையடுத்து , நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த வருண்குமாரை சமூக வலைதளங்கள் மற்றும் ஊடகங்களில் அவதூறாக விமர்சித்ததாகவும், அவரது நற்பெயருக்கு தீங்கு விளைவித்ததாகவும் கூறி, டிஐஜி வருண்குமார் அவதூறு வழக்கை திருச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.

இந்த வழக்கை தடுத்து வைக்க வேண்டும் எனக் கோரி, சீமான் தனது வழக்கறிஞர் மூலமாக மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி, வழக்கு விசாரணைக்கு உட்பட்டதாக தான் உள்ளது என கூறி சீமான் தரப்பில் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்துள்ளார்  அத்துடன், ஜூலை 7ஆம் தேதி இந்த வழக்கை தொடர்ந்து விசாரிக்க முடிவு செய்த நீதிமன்றம், அன்றைய தினம் சீமான் நேரில் ஆஜராக வேண்டும் எனக் கடுமையான உத்தரவை பிறப்பித்துள்ளது.

இதன்மூலம், இந்த வழக்கு தமிழ்நாடு அரசியல் வட்டாரங்களில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.