
பாகிஸ்தானின் பயங்கரவாதச் செயல்கள் மற்றும் அதற்கு எதிரான இந்தியாவின் ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கை குறித்து உலக நாடுகளுக்கு விளக்க, திமுக எம்பி கனிமொழி தலைமையிலான 7 எம்பிக்கள் கொண்ட குழு வெளிநாடுகளுக்கு சுற்றுபயனம் மேற்கொண்டுள்ளது.
இக்குழுவில் கனிமொழி உட்பட, சமாஜ்வாதி கட்சியின் ராஜீவ் ராய், தேசிய மாநாட்டு கட்சியின் மியான் அல்தாப் அகமது, பாஜகவின் பிரிஜேஷ் சோவ்டா, ஆர்ஜேடியின் பிரேம் சந்த் குப்தா, ஆம்ஆத்மி கட்சியின் அசோக் குமார் மிட்டல் ஆகியோர் உள்ளனர். அத்துடன் வெளிநாடடு தூதர்கள் மங்சீவ் எஸ் புரி மற்றும் ஜாவேத் அஷ்ரப் ஆகியோரும் இணைந்துள்ளனர்.
இந்த குழு ஸ்பெயின், கிரீஸ், ஸ்லோவேனியா, லத்திவா, ரஷ்யா ஆகிய ஐந்து நாடுகள் சென்றுள்ளன. இந்நிலையில், ஸ்பெயினில் நடந்த சந்திப்பின் போது, புலம்பெயர் இந்தியர் ஒருவர் கனிமொழியிடம், “இந்தியாவின் தேசிய மொழி எது?” என கேள்வி எழுப்பினார்.
அதற்கு கனிமொழி, ‛‛இந்தியாவின் தேசிய மொழி வேற்றுமையிலும் ஒற்றுமையாக இருப்பது தான். இதுதான் உலகிற்கு இந்த குழு தரும் செய்தி. இதுவே இன்றைக்கு மிக முக்கியமான விஷயம்” என்று பதிலளித்தார். அவரது இந்த பதில் அரங்கில் இருந்தவர்களை ஈர்த்து, கைத்தட்டல்களையும், பாராட்டுகளையும் பெற்றது.
இந்த பதில் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. குறிப்பாக, இந்தியாவிற்குத் தேசிய மொழி என்று ஒன்றில்லை என்ற உண்மையை இந்த கூற்று முலம் வெளிப்படுத்திய கனிமொழியின் அணுகுமுறை, பலரின் கவனத்தையும் மதிப்பையும் பெற்றுள்ளமை குறிப்பிடதக்கது.