இல்லாத சார்களை உருவாக்கி இழிவான அரசியல் செய்யும் ஒரே சார் பழனிசாமி சார்தான் –  அமைச்சர் ரகுபதி 

Minister Ragupathi accuses Palaniswami of fabricating fake ‘Sirs’ and engaging in dirty politics

சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானது தொடர்பான வழக்கில், குற்றவாளி ஞானசேகரனுக்கு  குறைப்பு இல்லாத 30 ஆண்டுகள் கடும் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, “FIR-ல் குறிப்பிடப்பட்ட ‘அந்த சார்’ யார்? ஏன் அவர் விசாரணையிலிருந்து விலக்கப்பட்டார்?” எனக் கேள்வியெழுப்பி, திமுக அரசு நிஜ குற்றவாளிகளை மறைத்துள்ளதாக குற்றம் சாட்டினார்.

அதற்கு பதிலளித்த அமைச்சர் ரகுபதி, “திராவிட மாடல் அரசின் உறுதியான நடவடிக்கையால் ஐந்து மாதங்களில் விசாரணை முடித்து நீதிமன்றத்தில் தீர்ப்பு பெற்றுள்ளோம். 60 நாட்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என முதலமைச்சர் வாக்களித்தார்; அதேபோல் நடந்தும் விட்டது” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், “நீதிமன்றத்தில் மாநில அரசு தாக்கல் செய்த வலுவான சாட்சிகள், அறிவியல் அடிப்படையிலான வாதங்கள் ஆகியவற்றால் ஞானசேகரனே ஒரே குற்றவாளி என உறுதி செய்யப்பட்டது. ‘யார் அந்த சார்?’ என புரளியை வைத்து அற்ப அரசியல் செய்ய முயன்ற பழனிசாமியின் நடவடிக்கை தோல்வியடைந்துள்ளது” என்றும் அவர் விமர்சித்தார்.

பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதிப் பெற்று தருவதை விட இந்த நிகழ்வை வைத்து திமுகவின் மீது எப்படியாவது களங்கம் சுமத்தலாம் எனக் கேவலமான அரசியல் செய்து வந்த அற்பபுத்தி பழனிசாமியின் புரளி நாடகம் தோற்றுப் போனபோதும் கொஞ்சம் கூட வெட்கமே இல்லாமல் மீண்டும் அதே பொய்யை தூக்கி கொண்டு வந்திருக்கிறார் பச்சைப்பொய் பழனிசாமி

இல்லாத சார்களை உருவாக்கி இழிவான அரசியல் செய்யும் ஒரே சார் பழனிசாமி சார்தான். இது போன்று பொய் புரளிகளை வைத்து பித்தலாட்ட அரசியல் செய்வதையே முழுநேர தொழிலாகச் செய்து கொண்டிருக்கும் பழனிசாமி இன்று போல் உண்மைகளால் தொடர்ந்து அவமானப்படப் போவது உறுதி!

தமிழ்நாட்டு பெண்களின் உரிமைகளை உயர்த்தி அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் நுனியளவு சமரசத்திற்கு இடம்தராமல் ஆட்சி செய்யும் மாண்புமிகு முதலமைச்சரின் ஆட்சியில் பெண்களுக்குத் துன்பம் விளைவிக்கும் எந்தக் குற்றவாளியும் தப்ப முடியாது என்பதற்கு அண்ணா பல்கலைக்கழக வழக்கின் தீர்ப்பே சாட்சி” என குறிப்பிட்டுள்ளார்.  

“பொல்லாச்சி வழக்கில் பழனிசாமியின் காலத்திலே 6 ஆண்டுகள் நீடித்த விசாரணையை, தற்போது ஐந்தே மாதங்களில் முடித்திருப்பது – பெண்களுக்கு நீதியை விரைவாகக் கொடுக்கும் திமுக அரசின் உறுதிப்பாட்டை காட்டுகிறது” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.