
கடந்த ஏப் 22ம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய பயங்கரவாத தாக்குதலில் சுற்றுலாப் பயணிகள் 26 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் பயங்கரவாத அமைப்பு ஒன்று பொறுப்பேற்றுள்ளதால் பாகிஸ்தானுக்கு எதிராக பல அதிரடி நடவடிக்கைகளை ஒன்றிய அரசு எடுத்து வருகிறது.
அதே வேளையில், இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தானும் தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருவதால், இரு நாடுகளுக்கும் இடையே போர் நிலவும் சூழல் உருவாகியுள்ளது.
இந்த தாக்குதலில் உயிரிழந்த நெல்லூர் மாவட்டத்தை சேர்ந்த மதுசூதன் ராவ் உட்பட 26 பேருக்கும் அஞ்சலி செலுத்தும் நிகழ்வில் கலந்து கொண்டு பவன் கல்யாண் அஞ்சலி செலுத்தினார். மேலும் மதுசூதன் குடும்பதாருக்கு 50 லட்சம் நிதியுதவியும் வழங்கினார்.
இதையடுத்து பேசிய பவன் கல்யாண் “ காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதல் இந்தியா மட்டுமின்றி, உலகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.
பஹல்காம் பகுதியில் அப்பாவி மக்களை கொன்ற தீவிரவாதிகளுக்கும், அவர்களை ஊக்குவிக்கும் பாகிஸ்தானுக்கும் ஆதரவாக பேசுவதும் மிகவும் தவறு. இருப்பினும் நாங்கள் அப்படித்தான் பேசுவோம் என்று கூறுபவர்கள் பாகிஸ்தானுக்கே செல்லுங்கள்.
இந்துக்களுக்கு என்று இருக்கும் ஒரே நாடு இந்தியா மட்டும் தான். இங்குக் கூட நாங்கள் சுதந்திரமாக வெளியே சென்றுவர கூடாது என்றால் எப்படி? என்று ஆவேசமாக பேசினார்.
மேலும் தீவிரவாதத்துக்கு எதிராக அனைவரும் ஒரே மாதிரி நடந்து கொள்வது அவசியமாகும். காஷ்மீர் நமது நாட்டின் ஓர் அங்கம். ஆனால், ஓட்டுக்காக அரசியல் நாடகம் ஆடக்கூடாது என்றும் கூறினார்.