
மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற தலைப்பில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக, இன்று கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், “எந்த போராட்டமாக இருந்தாலும் எங்கள் ஆட்சியில் அனுமதி வழங்கினோம். ஆனால் இன்றைய திமுக அரசு மக்களின் உரிமையை மறுக்கிறது” என்றார்.
அவர் தொடர்ந்தும், “சிவாஜி கணேசனை விட சிறந்த நடிகர் செந்தில் பாலாஜி. தேர்தலின்போது மக்களுக்கு வெள்ளிக் கொலுசு கொடுத்தவர். அவருக்கு திமுகவில் அளவுக்கு மீறிய அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் செந்தில் பாலாஜி தேர்தல் முடியும் வரை மட்டுமே திமுகவில் இருப்பார். பின்னர் எந்தக் கட்சியில் இருப்பார் என்பது தெரியாது” என்று கடுமையாக விமர்சித்தார்.
மேலும், “கரூரில் தினசரி ஒரு கோடி ரூபாய் மதிப்பில் மணல் திருட்டு நடைபெறுகிறது. செந்தில் பாலாஜி தன்னையே காப்பாற்றிக் கொள்ள முடியாதவர். அவரை மக்கள் நம்ப வேண்டாம்” என்றும் எடப்பாடி பழனிசாமி எச்சரித்தார்.