
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில், பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் செயல் தலைவர் டாக்டர் அன்புமணி ஆதரவாளர்களுக்கு இடையே கடும் பதற்றம் நிலவியது
சமீபத்தில் ராமதாஸ், அன்புமணியை செயல் தலைவர் மற்றும் அடிப்படை உறுப்பினர் பதவிகளில் இருந்து நீக்கியதாக அறிவித்தார். இதற்கு எதிராக, “ராமதாஸுக்கு அந்த அதிகாரமே இல்லை” என அன்புமணி தரப்பை சேர்ந்த வக்கீல் பாலு தெரிவித்ததால், இருதரப்பினருக்கும் இடையே முரண்பாடு அதிகரித்தது.
இதனிடையே, வருகிற 17-ஆம் தேதி திண்டிவனத்தில் உள்ள வன்னியர் சங்க அலுவலகத்தில், இடஒதுக்கீடு போராட்டத்தில் உயிரிழந்த 21 பேருக்கான அஞ்சலி நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இதில் அன்புமணி பங்கேற்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ராமதாஸ் ஆதரவாளர்கள் வன்னியர் சங்க அலுவலகத்திற்கு பூட்டு போட்டனர்.
இதையடுத்து அன்புமணி ஆதரவாளர்கள் அங்கு திரண்டு, அலுவலகத்தை திறக்க கோரினர். இதனால் இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் மற்றும் பரபரப்பு நிலவியது.
தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து சென்று, இருதரப்பினரையும் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபடுத்தினர். மேலும், அங்கு மீண்டும் மோதல் ஏற்படாமல் இருக்க, வன்னியர் சங்க அலுவலகத்திற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.