
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மக்களின் குறைகளை நேரடியாக அறிந்து தீர்வு காணும் வகையில் கடந்த ஜூலை 15 ஆம் தேதி ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் திட்டத்தை தொடங்கி வைத்தார். இந்த முகாம்களில் மகளிர் உரிமைத் தொகை, பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள், ஆவணங்களில் பெயர் திருத்தம், பட்டா, சிட்டா உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளுக்கான மனுக்கள் பெறப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே வைகை ஆற்றில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் மக்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்கள் மிதந்துகொண்டிருந்தது. இதைப் பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனடியாக அங்கு சென்ற போலீசார், நீரில் மிதந்த மனுக்களை சேகரித்தனர். அவற்றை ஆற்றில் எவர் வீசினர் என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.
மேலும், சிவகங்கை அருகே கீழடி, கொந்தகை, நெல் முடிகரை, மடப்புரம் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்ற முகாம்களில் பெறப்பட்ட மனுக்கள்தான் ஆற்றில் வீசப்பட்டுள்ளன என்றும், அந்த மனுக்களுக்கு இதுவரை தீர்வு காணப்படவில்லை என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.