
பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தளத்தில் பதிவு வெளியிட்டு கடும் அதிருப்தி தெரிவித்துள்ளார்.
நேற்று சில இடங்களில் வெளியான பதாகைகளில், பகவான் ஸ்ரீ இராமருடன் தன்னை ஒப்பிட்டு சித்தரித்திருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அதனால் தான் மிகுந்த மனவேதனை அடைந்ததாகவும், இறைசக்தியோடு மனித சக்தியை ஒருபோதும் ஒப்பிட முடியாது என்றும் ஒப்பிடக் கூடாது என்றும் உறுதியாக நம்புபவன் தான் என்று தெரிவித்துள்ளார்.
சேது சமுத்திரம் விவகாரத்தில் இராமபிரானைக் குறித்து தவறான பேச்சுகள் எழுந்தபோது சட்டமன்றத்தில் கண்டனம் தெரிவித்தது, ஆண்டாள் தாயாரைப் பற்றி சர்ச்சை கிளம்பியபோது முதலில் எதிர்த்து குரல் கொடுத்தது ஆகியவற்றை நினைவூட்டியுள்ளார்.
“நமது தெய்வங்களின் மீது நான் கொண்டுள்ள பக்தி, மரியாதையை கருத்தில் கொண்டு, என்னை வைத்து இவ்வாறான புகைப்படங்களை வெளியிடுவதை கடுமையாக கண்டிக்கிறேன். இனி ஒருபோதும் இப்படிச் செய்யாதிருப்பதை அன்பார்ந்த தாமரை சொந்தங்கள் உறுதி செய்ய வேண்டும்” என்று நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.