
ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காட் பகுதியைச் சேர்ந்த 17 வயது மாணவி, வேலூர் மாவட்டம் சேர்க்காட்டில் உள்ள கல்லூரியில் இளங்கலை முதலாமாண்டு படித்து வருகிறார். கடந்த 17ஆம் தேதி மாலை, கல்லூரி முடிந்தபின் சேர்க்காட்டில் இருந்து திருவலம் நோக்கி அரசு பஸ்சில் பயணம் செய்தார்.
அப்போது, அந்த பஸ்சில் கண்டக்டராக பணிபுரிந்த காட்பாடி அருகே மகிமண்டலம் திகுவாபள்ளியைச் சேர்ந்த காண்டீபன் (40), மாணவியிடம் இரட்டை அர்த்தத்தில் பேசியதுடன், சில்மிஷத்திலும் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இந்தச் சம்பவத்தால் வேதனையடைந்த மாணவி, புகார் அளித்ததைத் தொடர்ந்து, காட்பாடி அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, காண்டீபனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். பின்னர், அவரை வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.