
பொள்ளாச்சி அருகே கட்டிடத் தொழிலாளி ராகேஷ் தாஸ் (30) தாக்கி கொலை செய்யப்பட்ட வழக்கில், வங்கதேசத்தைச் சேர்ந்த பிரமதா பிஸ்வாஸ் (45) என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ராகேஷ் தாஸ், பிரமதா பிஸ்வாஸ் உள்ளிட்ட 5 பேர் பொள்ளாச்சியில் தங்கி கட்டிடப்பணியில் ஈடுபட்டு வந்தனர். கடந்த வாரம் உடுமலை சின்னாம்பாளையம் அருகே டாஸ்மாக் கடை முன்பு மது அருந்தியபோது, மதுவாங்கி கொடுக்காததால் ஏற்பட்ட தகராறு, அடிதடியாக மாறியுள்ளது. இதில் ராகேஷ் தாஸ் கடுமையாக தாக்கப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
சம்பவத்துக்கு பிறகு, பிரமதா பிஸ்வாஸ் வங்கதேசத்திற்கு தப்பிச் சென்றுள்ளார். இருப்பினும் எஸ்ஐ கவுதமன் தலைமையிலான தனிப்படை போலீசார் அங்கு சென்று அவரை கைது செய்து, விமானம் மூலம் பொள்ளாச்சிக்கு அழைத்து வந்தனர்.
தலைமறைவாக உள்ள மற்ற மூவரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.