
விழுப்புரம் மாவட்டம் ஐயன்கோவில்பட்டு பகுதியில் தனியார் உரம் தயாரிப்பு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. அந்த நிறுவனத்தில் வேலை செய்து வந்த ஒருபெண், நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரும், தமிழக முற்போக்கு முன்னணி வர்த்தக அணி மாநில பொருளாளருமான அப்துல் ஹக்கீம் தமக்கு பாலியல் தொந்தரவு செய்ததாக போலீசில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் விழுப்புரம் மாவட்ட போலீசார் அப்துல் ஹக்கீமை கைது செய்து விசாரணை நடத்தினர். இதில், அவர் புகார் அளித்த பெண்ணுக்கு மட்டுமல்லாமல், பத்துக்கும் மேற்பட்ட பெண்களுக்கு வாட்ஸ்அப்பில் ஆபாச குறுஞ்செய்திகள் அனுப்பி பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது.
இதையடுத்து, அப்துல் ஹக்கீம் மீது பாலியல் குற்றச்சாட்டு தொடர்பான பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.