
தருமபுரி மாவட்டம் புட்டிரெட்டிபட்டியில் செயல்பட்டு வரும் அரசு மேல்நிலைப் பள்ளியில், மாணவர்களிடம் சில ஆசிரியர்கள் சாதி பாகுபாடு காட்டுவதாகக் கூறி, பெற்றோர் ஒன்று சேர்ந்து பள்ளியை முற்றுகையிட்டுள்ளனர்.
பள்ளி வளாகத்தில் நடந்த இந்த போராட்டத்தில், “சாதிப் பெயரை கூறி மாணவர்களை திட்டுகிறார்கள், மாணவர்களை வேறுபடுத்திப் பார்க்கிறார்கள்” என பெற்றோர் குற்றம்சாட்டினர். மேலும், ஆசிரியர்களே தங்களுக்குள் பிரிவினை காட்டி, வெவ்வேறு ஸ்டாஃப் ரூம்களில் இருப்பது கூட மாணவர்களுக்கு தவறான எதிர்வினையை ஏற்படுத்துவதாகவும் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த மாவட்ட கல்வி அதிகாரி உடனடியாக சம்பவ இடத்திற்கு வருகைதந்து, பெற்றோர் மற்றும் மாணவர்களிடம் நேரில் பேசி விசாரணை மேற்கொண்டார். புகார்கள் உறுதியானால், தொடர்புடைய ஆசிரியர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில், சம்பவம் தொடர்பான வீடியோக்கள் மற்றும் புகார்கள் கல்வித் துறையிடம் வழங்கப்பட்டுள்ளன. மாணவர்கள் மீது எந்தவிதமான பாகுபாடும் ஏற்படக்கூடாது என்பதே பெற்றோர்களின் வலியுறுத்தல்.