
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் இயங்கும் அழகப்பா தொழில்நுட்பக் கல்லூரியில், நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த சபரீஸ்வரன் (வயது 19) என்ற முதலாம் ஆண்டு மாணவர் படித்து வந்தார்.
அவர் பல்கலைகழக விடுதியில் தங்கியிருந்த நிலையில் , நேற்று தனது அறையில் தூக்கிட்டு இறந்த நிலையில் சடலமாகக் காணப்பட்டார். இந்த சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
சபரீஸ்வரனின் மரணத்தை தொடர்ந்து, அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது. சம்பவம் தொடர்பாக காவல்துறையும், கல்லூரி நிர்வாகமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றன.
இந்த நிலையில், சபரீஸ்வரனின் தாயார் தெரிவித்ததாவது:
“என் மகன் மதுவும், சிகரெட்டும் பிடிக்க வேண்டுமென்று சக மாணவர்கள் வற்புறுத்தினார்கள். எதையும் செய்ய மறுத்ததற்காக அவனை அடித்து, தாடி, மீசை எடுக்க கட்டாயப்படுத்தி, மிகவும் டார்ச்சர் செய்தனர். அதற்காகத்தான் என் மகன் தற்கொலை செய்துகொன்டுள்ளான்.”என குற்றம்சாட்டியுள்ளார்
அண்மைக் காலமாக பல்கலைவளாகங்களில் ராகிங் சம்பவங்கள் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில், இச்சம்பவம் பல்வேறு கேள்வியையும் எழுப்பியுள்ளது