ஆட்சியர் அலுவலகத்தில் டீசல் ஊற்றி தீக்குளிக்க முயன்ற முதியவர்

"Elderly man tries to self-immolate by pouring diesel at the District Collector’s office."

வேலூர் மாவட்டம் ஊசூர் அருகே புளியமேடு கிராமத்தைச் சேர்ந்த காசி (60) என்பவர், உறவினர்களுடன் நிலத் தகராறு காரணமாக அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டு, கொலை மிரட்டல் விடுப்பதாக புகார் அளித்து வந்தார். ஆனால் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில், ஜூலை 21ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கலந்து கொண்ட காசி, திடீரென டீசல் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.

உடனே அங்கிருந்த காவல்துறையினர் அவரை தடுத்து நிறுத்தி, 108 ஆம்புலன்ஸில் வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து முதலுதவி சிகிச்சை அளித்தனர்.

இந்த சம்பவத்தால் ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்துள்ளனர்.